
பன்முக அறிவுத் திறன்கள்
ஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது. பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கல்வி அமைப்பில் வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் போன்றவை மட்டுமே சிறப்புத் திறன்களாகக் கருதப்படுவதிலும் வியப்பில்லை.
இவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன என்பதை உளவியலாளர் ஹாவர்ட் கார்டனர் உலகத்துக்கு உணர்த்தினார். அவரது பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாடு உலகெங்கும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கற்பிக்கும் முறைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளில் மாற்றி அமைத்துள்ளது. ஹாவர்ட் கார்டனரின் பன்முக அறிவுத் திறன்களை இந்திய, தமிழகச் சூழலில் எளிமையாகவும் ஆழமாகவும் அறிமுகம் செய்யும் நூல் இது.
மொழித் திறன், தர்க்கம் மற்றும் கணிதத் திறன், காட்சித் திறன், உடல் மற்றும் விளையாட்டுத் திறன், இசைத் திறன், மனிதத் தொடர்புத் திறன், தன்னிலை அறியும் திறன், இயற்கைத் திறன், இருத்தல்சார் திறன் என்று ஒன்பது விதமான திறன்களை நூலாசிரியர் ம. சுசித்ரா ‘வெற்றி கொடி’ இணைப்பிதழில் தொடராக எழுதினார். வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கிச் சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாயின் வாழ்க்கை வரை பன்முகத் திறன்கள் சார்ந்து இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.