தவழப் பழகும் முன்னமே அலைபேசியைத் துழாவப் பழகிவிடும் குழந்தைகளின் யுகம் இது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கும் சிறாரை வாசிப்புக்குள் அழைத்து வருவது நம் சமூகத்தின் முன்னால் இருக்கக்கூடிய மாபெரும் சவால். வண்ணமயமான காட்சிகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் சிறுவர்களைச் சொற்களால் ஈர்ப்பது கடினம்தான். ஒருவேளை அந்த சொற்களின் வழியாகக் கற்பனை உலகிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால், வாசிப்பின் வாசத்தை முகர்தல் கொஞ்சமேனும் சாத்தியப்படலாம். அதுவே அழகிய சித்திரக்கதையாக அது இருப்பின் சிறுவர்கள் அதில் லயித்துப் போவது நிச்சயம். சொல்லப்போனால் தமிழில் சிறார் நாவல் வளர்ச்சியில் சித்திரக் கதைகளுக்கு முதன்மையான பங்குள்ளது. அதிலும் தமிழ் இதழியல் வரலாற்றில் சித்திரக் கதைகளுக்கு மகோன்னதம் வாய்ந்த இடமுள்ளது.
வெகுஜன மக்களிடம் சித்திரக்கதை வடிவத்தைக் கொண்டு சேர்த்தது இதழியல் துறை என்றே மார்தட்டிச் சொல்லலாம். 1948இல் வெளிவந்த ‘டமாரம்’ இதழில் இடம்பெற்ற சித்திரக்கதைதான் தமிழ் பரப்பில் இதற்கான முன்னோடியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1949இல் ‘சித்திரக்குள்ளன்’ சிறுவர் இதழில் ‘காட்டுச்சிறுவன் கண்ணன்’, ‘வேதாள உலகத்தில் விச்சு’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன.