வேகமெடுத்து வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் அன்றாடம் புதுப்புது துறைகள் தோன்றிக் கொண்டிருந்தாலும், “நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?” என்கிற கேள்வியைப் பள்ளியில் மாணவர்களிடம் கேட்டால், “ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் ஆபிசர்” என்கிற பதிலை பத்தில் நான்கு பேராவது இன்றும் சொல்லக் கேட்கிறோம்.
‘இவரு பெரிய கலெக்டரு’ என்பது தமிழர்களின் விமரிசன பயன்பாடுகளுள் ஒன்று. அந்த அளவுக்கு நம் கனவு பணிவாழ்க்கையாக குடிமைப்பணி நம்முள் ஊறிப்போய் இருக்கிறது.
தாம் பெற்ற கல்வியை சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற சமூக அக்கறையும் இந்த கனவுக்கு வலு சேர்க்கும் உந்துசக்தி எனலாம்.
“சமூகத்துக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதினால் திறமை வாய்ந்த நபரிடமிருந்து உயர்ந்த மனிதர் வேறுபட்டு நிமிர்ந்து நிற்கிறார்” என்றார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அப்படிப்பட்ட உயர்ந்த மனிதராகும் பெருங்கனவு பலருக்குள் அவர்களைத் தூங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். அவர்களது கனவு நிஜமாக உரிய வழிகாட்டுதல் தேவை.