ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய சவால்களை மனிதன் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். புதிது புதிதான கண்டுபிடிப்புகள் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. இப்போது தொழில்நுட்பப் புரட்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு வடிவம்தான் `ஸ்டார்ட்அப்'. உலக அளவில் யோசி; உள்ளூர் அளவில் செயல்படுத்து என்பதுதான் இதன் உள்ளடக்கம். இப்படி யோசித்த 25 தொழில்முனைவர்களின் விரிவான பேட்டிகளின் தொகுப்புதான் `ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?' என்னும் இந்தப் புத்தகம். `சவாலே சமாளி' என்பதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தாரகமந்திரம்!
`இந்து தமிழ் திசை'யின் `வணிக வீதி' பகுதியில் இந்தப் பேட்டிகள் வெளிவந்தபோதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது வெளிவரும் தொகுப்பு நூலுக்கும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவது முதல் தொடர்வது வரை அதில் இருக்கும் நுட்பங்கள், சவால்களை மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டவர்களின் அனுபவ வார்த்தைகளிலேயே வெளிப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.