மனித நாகரிகத்தின் வரலாறு என்பது வெறும் அரசர்களின் படையெடுப்புகளாலோ, பேரரசுகளின் வீழ்ச்சியாலோ அல்லது புவியியல் எல்லைகளின் மாற்றங்களாலோ மட்டும் தீர்மானிக்கப்பட்டதல்ல. அது மனிதகுலம், தன் தேவைக்காக இயற்கை அன்னை தந்த பொருட்களையும் தனிமங்களையும் எவ்வாறு கண்டறிந்து, உருமாற்றிப் பயன்படுத்தியது என்ற ‘பொருள் அறிவியல்’ (Materials Science) பயணத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஆதிமனிதனின் கைகளில் அகப்பட்ட களிமண், நெருப்பின் வெம்மையில் சுடப்பட்டு உறுதியான செராமிக் பொருளாக மாறிய அந்தக் கண்டுபிடிப்பு, மனித நாகரிகத்தின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.
கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் எனக் கடந்து வந்த மனிதகுலம், இன்றைக்கு உலகை ஆட்டிப்படைக்கும் ‘சிலிக்கான்’ மற்றும் ‘நேனோ’ தொழில்நுட்ப யுகத்தில் கால்பதித்துள்ளது. அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் எளிய சுடுமண் பானை முதல், விண்வெளியை நோக்கிச் சீறிப் பாயும் ராக்கெட்டுகள், கணினிச் சில்லுகள் (Chips), முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) வரை மனிதன் அடைந்துள்ள இந்த வியத்தகு தொழில்நுட்ப மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் கொண்டு சேர்ப்பதே இந்நூலின் முதன்மை நோக்கமாகும்.
14 அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில், கடினமான அறிவியல் கோட்பாடுகளை வறண்ட சூத்திரங்களாகக் கூறாமல், சுவாரசியமான வரலாற்றுப் பயணத்தைப் போல ஆசிரியர் வடிவமைத்துள்ளார். தனிம வரிசை அட்டவணையை ஒரு பேரரசாகவும், அதில் உள்ள 118 தனிமங்களைக் குடிமக்களாகவும் உருவகப்படுத்தி விவரித்துள்ள விதம் அற்புதம்!
இஸ்ரோ விஞ்ஞானியும் பிரபல அறிவியல் எழுத்தாளருமான முனைவர் பெ.சசிக்குமார் அவர்களின் 50வது நூலாக இது அமைந்திருப்பது சிறப்புக்குரியது.